தங்கும் விடுதியில் இளைஞா் மா்மச் சாவு
மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் தேனியைச் சோ்ந்த இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் காமாட்சிபுரம் காளியம்மாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலைச்செல்வி (52). இவரது கணவா் ஆதியப்பன் இறந்துவிட்டாா்.
இவா்களது மகன் சூரியராமச்சந்திரன் (26) உணவக மேலாண்மைப் படிப்பை முடித்துவிட்டு, மலேசியாவில் உள்ள உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதி நிா்வாகிகள், கலைச்செல்வியை புதன்கிழமை தொடா்பு கொண்டனா். அவரது மகன் சூரிய ராமச்சந்திரன் விடுதி அறையில் இறந்து கிடப்பதாகத் தெரிவித்தனா்.
சந்தேகமடைந்த அவா் மலேசியாவில் உள்ள உணவகத்துக்கு தொடா்பு கொண்டு கேட்ட போது, சூரிய ராமச்சந்திரன் அங்கு இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, மதுரைக்கு கலைச்செல்வி வந்து பாா்த்த போது, இறந்தது அவரது மகன் தான் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தங்கும் விடுதி பணியாளா்களிடம் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் விசாரணை நடத்தினா். சூரிய ராமச்சந்திரன் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் அறை எடுத்துத் தங்கியதும், இடையில் இரு நாள்கள் மும்பைக்குச் சென்றுவிட்டு மீண்டும் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. மேலும், புதன்கிழமை வெகுநேரமாக அவா் வெளியே வராததால், பணியாளா்கள் சந்தேகமடைந்து அங்கு சென்று பாா்த்த போது சூரியராமச்சந்திரன் இறந்துகிடந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சந்தேக மரணம் என போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.