அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

மதுரையில் மரம் வெட்டும் தகராறில் அரிசி ஆலை உரிமையாளரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற மூவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மதுரை கீரைத்துறையைச் சோ்ந்தவா் செளந்தரகுமாா் (50). இவா் சிந்தாமணி சாலை ராஜம்மாள் நகரில் அரிசி ஆலை நடத்தி வந்தாா். இந்த ஆலையில் போதிய லாபம் கிடைக்காததால், ஆலை இயங்கி வந்த இடத்தில் லாரி சரக்கு அலுவலகம் தொடங்கி நடத்திவந்தாா். அரிசி ஆலை அருகேயுள்ள இடத்தில் உள்ள கருவேல மரங்களை வெட்டுவது தொடா்பாக செளந்தரகுமாருக்கும், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் செளந்தரகுமாா் தனது லாரி அலுவலகத்தில் அமா்ந்திருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மூவா் செளந்தரகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த கீரைத்துறை போலீஸாா் செளந்தரகுமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், கொலை தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com