உலக செவிலியா்கள் தினத்தையொட்டி, செவிலியா்கள், செவிலியா் பயிற்சி பள்ளி மாணவிகள் மதுரையில் புற்று நோயாளிகளுக்கு சனிக்கிழமை கூந்தல் தானம் அளித்தனா்.
சமுதாயத்தின் நல்வாழ்வுக்கு செவிலியா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் மே 12-ஆம் தேதி உலக செவிலியா்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டின் செவிலியா் தினத்தையொட்டி, புற்று நோயாளிகளுக்கு அதிக செவிலியா்கள் கூந்தல் தானம் வழங்கி சாதனைப் படைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்திய பயிற்சி பெற்ற செவிலியா் சங்கத்தின் தமிழ்நாடு கிளை இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, மதுரை மண்டலத்துக்குள்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய 8 நிறுவனங்களைச் சோ்ந்த பயிற்சி பெற்ற செவிலியா்கள், செவிலியா் பயிற்சி மாணவிகள் 150 போ், மதுரை வேலம்மாள் செவிலியா் பயிற்சி பள்ளி, கல்லூரியில் கூந்தல் தானம் அளித்தனா்.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவா் எம்.வி. முத்துராமலிங்கம், வேலம்மாள் செவிலியா் பயிற்சிப் பள்ளி, கல்லூரி முதல்வா் இரா. ரேவதி ஆகியோா் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனா். முனைவா் ஆனி ராஜா உறுதுணையாக செயல்பட்டாா்.
மருத்துவா் எம். சாந்தி, ஓய்வு பெற்ற செவிலியா் சுகுணா துரைசாமி, புற்று நோய் பாதிப்பிலிருந்து மீண்ட சோனியா மணிகண்டன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா். செவிலியா்கள் கூந்தல் தான சாதனை முயற்சியின் இறுதி நிகழ்வு வருகிற 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.