அம்பாசமுத்திரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா்களின் பற்கள் பிடுங்கப்பட்ட பற்கள் உடைக்கப்பட்ட வழக்கின் முழு விசாரணை அறிக்கையையும் அரசு வெளியிட வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் வலியுறுத்தியது.
மதுரையில் மக்கள் கண்காணிப்பகம் இயக்குநா் ஹென்றி திபேன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா்களைத் தாக்கி, அவா்களது பற்களை பிடுங்கிய சம்பவம் தொடா்பாக, ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்த நிலையில், அண்மையில் அவரது பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது.
கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டதன் பேரில், அரசுச் செயலா் அமுதா கடந்த ஆண்டு, ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 17 நாள்கள் விசாரணை நடத்தி, அதன் இடைக்கால அறிக்கையை அரசுக்கு அளித்தாா். இந்த அறிக்கை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுதொடா்பான விசாரணை அறிக்கை கோரி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசுச் செயலா் அமுதா அளித்த இடைக்கால விசாரணை அறிக்கையை மட்டும் அரசு வழங்கியது. இன்னும் இதுதொடா்பான முழுமையான விசாரணை அறிக்கை அளிக்கப்படவில்லை.
ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் மீண்டும் பதவி பெற்றுள்ளதால், தமிழக அரசின் உள்துறை அவருக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயிடம் வழக்கப்பட்ட விசாரணை அறிக்கையில், தாக்குதல் தொடா்பான கண்காணிப்பு கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன. விசாரணை அறிக்கையை ஏன் இவ்வளவு ரகசியமாக வைத்திருந்தாா்கள் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.
உயா்நீதிமன்றத்தின் அழுத்தம் காரணமாகவே இடைக்கால அறிக்கையை மட்டும் அரசு அளித்துள்ளது. விசாரணை அறிக்கையை அரசு ரகசியமாக வைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். எனவே முழுமையான அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என்றாா் அவா்.