ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் 477 ஆம் ஆண்டு புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவுப்பகுதியில் பாதுகாவலராக கருதப்படும் தங்கச்சிமடம் வேர்க்கோடு புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா ஆண்டு தோறும் மத நல்லிணக்க விழாவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புனித சந்தியாகப்பரின் 477 ஆம் ஆண்டு ஆலய திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. சந்தியாகப்பர் ஆலயத்தில் இருந்து 7 கிராமங்களை சேர்ந்த தலைவர்கள் சந்தியாகப்பர் திருவுருவப் படம் பதித்த திருக்கொடியை மேள தாளம் முழங்க எடுத்து வந்தனர். ஆலயம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் ராமநாதபுரம் மறைமாவட்ட அதிபர் அருள் ஆனந்த் புனித நீர் ஊற்றி கொடி ஏற்றினார்.
இந்நிகழ்ச்சியில் விழாக்குழு தலைவர் பூபதி ஆரோக்கியராஜன் தலைமை வகித்தார். பங்கு தந்தைகள் செபாஸ்டின், அந்தோணி சந்தியாகு, அந்தோணி செபஸ்தியான், தங்கச்சிமடம் ஜமாஅத் தலைவர் ரப்பானி, பசீர் மற்றும் நிர்வாகிகள், தங்கச்சிமடம் இந்து தலைவர்கள் கோவிந்தன், பவர் நாகேந்திரன் உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து திருப்பலி நடைபெற்றது. இந்த திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) தொடங்கி 25 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான புனிதரின் திருத்தேர் பவனி ஜூலை 24 இல் நடைபெறுகிறது.
கொடியேற்ற விழாவில் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஸ் தலைமையில் 30 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.