திருவாடானை அருகே தொண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.
தொண்டி அருகே சம்பையைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம் (70). இவர், இரு சக்கர வாகனத்தில் தொண்டிக்குச் சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, கிழக்கு கடற்கரைச் சாலையில் சம்பை பேருந்து நிறுத்தம் அருகே ராமநாதபுரத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற கார் மோதியது. இதில், ஆசீர்வாதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தொண்டி போலீஸார், அவரது சடலத்தைக் கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநரான புதுக்கோட்டையைச் சேர்ந்த எட்வின் தாஸ் (43) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.