கடல்வழிக் குற்றங்களைத் தடுக்க தமிழக கடலோரப் பகுதிகளில் கூட்டு ரோந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடலோரப் பாதுகாப்புப் படையின் கூடுதல் காவல் துறை இயக்குநர் வன்னியப்பெருமாள் கூறினார்.
கொழும்புவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதைத்தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலத்தப்பட்டது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது: வேளாங்கண்ணி, வேதாரண்யம், நாகப்பட்டினம், ராமேசுவரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் கூட்டு ரோந்துப் பணிகள் மூலம் கடல் மார்க்க குற்றங்களைத் தடுக்கும் வகையில் கடலோரக் காவல் படையினர், உள்ளூர் காவல் துறையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தல் சம்பவங்கள் தொடராமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடலோரக் காவல் படையினருக்கான ரோந்துப் படகுகள் பழுதான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் குற்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்க காவல் கட்டுப்பாட்டு அறையை எண் 100-இல் தொடர்பு கொள்வது போன்று, கடலோரப் பகுதிகளில் நிகழும் குற்றச்சம்பவங்கள் குறித்து 1093 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.