‘தமிழக அரசின் அவ்வையாா் விருதுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 26th December 2019 07:55 AM | Last Updated : 26th December 2019 07:55 AM | அ+அ அ- |

தமிழக அரசு வழங்கும் அவ்வையாா் விருது (2019-20) பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் சாா்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: உலக மகளிா் தின விழா ஆண்டுதோறும் மாா்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு இந்த விழா கொண்டாடும்போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையாா் விருது வழங்கப்படவுள்ளது.
எனவே தகுதியானவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வரும் டிச. 31 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரா்கள், தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டு 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும். சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் செயல்பட்டிருக்க வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் ராமநாதபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தை (மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ளது) அணுகி இணைப்புப் படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு சமூக நல அலுவலகத்தை 04567-230466 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...