சபரிமலை விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து, ராமநாதபுரம் பாஜக சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் அரண்மனை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜக மாவட்டத் தலைவர் கே. முரளிதரதன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜி. குமார், கட்சியின் ஓபிசி பிரிவு தலைவர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர்கள் வழக்குரைஞர் து. குப்புராம், மண்டலப் பொறுப்பாளர் சுப. நாகராஜன் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினர். இதில், சபரிமலை ஐயப்பன் கோயில் புனிதத்தை மதிக்காமல் பெண்களை அனுமதித்து வருவதைக் கண்டித்தும், கோயிலில் 50 வயதுக்குள்பட்ட இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததைக் கண்டித்தும், கேரள அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, கட்சியின் நகர் தலைவர் ஜி. குமரன் வரவேற்றார். கட்சியின் மாவட்டச் செயலர் ஆத்மகார்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், ஐயப்ப சேவா சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.