குடிமராமத்து பணிகளை சிறப்பாக செயல்படுத்தும் விவசாயிகளுக்குப் பரிசு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
By DIN | Published On : 15th July 2019 07:28 AM | Last Updated : 15th July 2019 07:28 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தும் கண்மாய்களின் ஆயக்கட்டு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது- ராமநாதபுரம் மாவட்டத்தில் 69 கண்மாய்கள் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்படவுள்ளன. கண்மாய்களில் உள்ள அனைத்து சீமைக்கருவேல மரங்களும் முற்றிலுமாக அகற்றப்பட்டு மடைகள் உள்ளட்டவை சீரமைக்கப்படவுள்ளன. கண்மாய் குடிமராமத்துப் பணிக்காக அந்தக் கண்மாய் ஆயக்கட்டு விவசாயிகள் அடங்கிய குழுவினருக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மராமத்து பணிகளின் போது கண்மாய்களைச் சுற்றிலும் பனை மற்றும் ஆலம் போன்ற பாரம்பரிய மரங்கள் நடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளன.
கண்மாய் குடிமராமத்துப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தும் ஆயக்கட்டு விவசாய குழுவினருக்கு பரிசுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து ஆயக்கட்டு குழுவினரும் தமக்குரிய கண்மாய்களை முழுமையான சேவை மனப்பான்மையுடன் செயல்படுத்திட வேண்டும் என்றார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...