ராமநாதசுவாமி கோயிலில் உடை மாற்ற இடமின்றி பெண் பக்தர்கள் தவிப்பு
By DIN | Published On : 09th June 2019 02:46 AM | Last Updated : 09th June 2019 02:46 AM | அ+அ அ- |

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித தீர்த்தமாடும் பெண் பக்தர்கள் உடை மாற்ற இடமின்றி தவித்து வருகின்றனர்.
இக் கோயிலுக்கு தினமும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், அமாவாசை மற்று விழா நாள்களில் இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை எட்டும். இதில், பெரும்பாலான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய பின்னர், கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தக் கிணறுகளில் நீராட வருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் செல்லிடப்பேசி, பைகள், துணிகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் கொண்டு வரும் அனைத்து பொருள்களும் கிழக்கு வாசல் பகுதியில் உள்ள பொருள்கள் பாதுகாக்கும் அறைகளில் வைக்கப்பட்ட பின்னர், புனித நீராடச் செல்லவும், தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில், வடக்கு கோபுரம் வழியாக நீராடச் செல்லும் பக்தர்கள் 22 தீர்த்தக் கிணறுகளில் நீராடி, பின்னர் தெற்கு பகுதி வழியாக வெளியே வருகின்றனர்.
இதன் பின் ஈரத்துடன் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு ராஜகோபுரம் அருகே பொருள்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருக்கும் துணிகளை எடுத்து, தெருவிலேயே உடை மாற்ற வேண்டிய நிலை உள்ளது. இதனால் உடை மாற்ற இடமின்றி பெண்கள் தவிக்கும் நிலை உள்ளது.
எனவே, கோயிலுக்குள் தீர்த்தங்களில் நீராடச் செல்லும் பெண் பக்தர்கள் மாற்று உடையை எடுத்துச் செல்ல போலீஸார் அனுமதிக்க வேண்டும். அல்லது புனித நீராடிய பின்னர் வெளியேறும் தெற்கு ராஜகோபுர பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபம் அருகே உடை மாற்றும் அறையை கோயில் நிர்வாகம் சார்பில் கட்டித் தர வேண்டும் என பெண் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.