ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் துறைமுகப் பகுதியில் சனிக்கிழமை கடல் 40 அடி வரை உள்வாங்கியது.
ராமேசுவரம் பகுதியில் உள்ள மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 4 நாள்களாக தொடர்ந்து பலத்த சூறை காற்று வீசி
வருகிறது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதற்கிடையில், தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்க உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சனிக்கிழமை வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்தும், கடல் கொந்தளிப்புடனும் காணப்பட்டது.
ஆனால், அதே நேரத்தில் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 40 அடி வரை கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்களுக்கோ, படகுகளுக்கோ எந்த பாதிப்பும் இல்லை என மீனவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், கடல் பகுதியில் பலத்த சூறை காற்று வீசி வருவதால் மீனவர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்நிலையில் உள்வாங்கிய கடல் சனிக்கிழமை மாலையில் மீண்டும் வழக்கமான நிலைக்கு திரும்பியது.