ராமேசுவரம் மண்டபம் பேரூராட்சியில் தடையின்றி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியில் சுமார் 22 ஆயிரம் பேர் உள்ளனர்.
இவர்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்கிட 13.40 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 7 லட்சம் தண்ணீர் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 6.40 லட்சம் தண்ணீர் பேரூராட்சிக்கு சொந்தமாக குடிநீர் கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது.
தற்போது தொடர்ந்து வறட்சி நிலவி வருவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் உடன் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக ரூ. 13 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிவகங்கை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா மேற்பார்வையில் தேசிய நெடுஞ்சாலையையொட்டிள்ள சிங்காரத் தோப்புப் பகுதியில் ரூ. 13 லட்சம் மதிப்பிட்டில் பிரமாண்ட கிணறு,மோட்டர் அறை, குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.மஞ்சுநாத் மற்றும் இளநிலை உதவியாளர் எஸ்.முனியசாமி தலைமையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மண்டபம் பேரூராட்சி பகுதியில் நாள்தோறும் தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.