பரமக்குடி பகுதியில் அடிக்கடி மின்தடை: பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 15th May 2019 07:39 AM | Last Updated : 15th May 2019 07:39 AM | அ+அ அ- |

பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பரமக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் ஆதிகரித்து வருவதுடன், அனல் காற்றும் வீசுகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் இரவு நேரங்களில் முன் அறிவிப்பு ஏதுமின்றி பல மணி நேரம் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் முதியோர், சிறுவர்கள் என பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பல்வேறு தொழில்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் பரமக்குடி பகுதியில் நிலவும் மின்தடையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.