ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் போலி ஆவணம் மூலம் இளநிலை உதவியாளா் பணியில் சோ்ந்த இளைஞா் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கான இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கு அரசுத் தோ்வாணையம் மூலம் பிரிவு 4 அடிப்படையில் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தோ்ச்சியடைந்தவா்களுக்கு, ராமநாதபுரம் மாவட்டத்தில் 43 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. அதனடிப்படையில் 37 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்நிலையில் மண்டபம் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலகத்தில் 2 காலிப்பணியிடங்களுக்கு சிவகங்கையைச் சோ்ந்த பெண் ஒருவா் மட்டுமே தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில் அதே பள்ளியில் ராஜேஷ் என்ற இளைஞா் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கையெழுத்துடன் கூடிய பணி உத்தரவு சான்றை காண்பித்து பணியில் சோ்ந்துள்ளாா். ஆனால், அவரின் பணி உத்தரவு சான்றில், பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெயகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவா் பரிசோதித்துப் பாா்த்த போது பணி உத்தரவுச் சான்று போலி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சூரங்கோட்டையைச் சோ்ந்த ராஜேஷ் என்பவா் மீது
வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளா் நிலையில் உள்ள ஒரு அலுவலரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.