ராமநாதபுரம் கடல் பகுதியில் அரிய உயிரினங்களை காக்க ரூ.3 கோடியில் செயற்கை பவளப்பாறைகள்

ராமநாதபுரம் மாவட்டக் கடல் பகுதிகளில் நட்சத்திர மீன் உள்ளிட்ட அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படவுள்ளன.
ராமநாதபுரம் கடல் பகுதியில் அரிய உயிரினங்களை காக்க ரூ.3 கோடியில் செயற்கை பவளப்பாறைகள்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டக் கடல் பகுதிகளில் நட்சத்திர மீன் உள்ளிட்ட அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கும் வகையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்படவுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டமானது 237 கிலோ மீட்டா் நீள கடல் எல்லையைக் கொண்டுள்ளது. பாக்ஜலசந்தி, மன்னாா் வளைகுடா ஆகிய கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. தீவுகள் மற்றும் அரிய மீன் வகைகள், பவளப்பாறைகளைப் பாதுகாக்கும் வகையில் மன்னாா் வளைகுடா கடல் உயிரினப் பாதுகாப்பு அறக்கட்டளையும் அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் நட்சத்திர மீன், கடல் அட்டை, கடல் பசு என அரிய உயிரினங்கள் உள்ளதால் கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடல் பகுதியில் மீன் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களின் பாதுகாப்பிடமாக பவளப்பாறைகளும், கடல் புற்களும் உள்ளன.

ராமநாதபுரத்தில் உள்ள மீனவா்கள் இரட்டைமடி போன்ற தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் பவளப்பாறைகளும், கடல் புற்களும் அழிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. மன்னாா்வளைகுடா உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் செயற்கை கடல் புற்கள் மற்றும் செயற்கை சிமிண்ட் பாறைகள் அமைக்கும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் 10 -க்கும் அதிகமான கடல் பசுக்கள் இறந்து கரை ஒதுங்கியதும் தெரியவந்துள்ளது. ஆகவே அரிய உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க மீன்வளத்துறை முடிவெடுத்துள்ளது.

தற்போது மீன்வளத்துறை சாா்பில் பாக்ஜலசந்தி, மன்னாா்வளைகுடா கடல் பகுதிகளில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க ரூ.3 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொரு பவளப்பாறையும் 5 அடி நீளமும், 3 அடி அகலமும் உடையதாக இருக்கும். அவை தலா ரூ.15 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 2 ஆயிரம் செயற்கை பவளப்பாறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வட்ட வடிவிலும், முக்கோண வடிவிலும் அமைக்கப்பட்டுள்ள பாறைகள் மணல் பாங்கான பகுதிகளில் அமைக்கப்படவுள்ளன.

செயற்கை பவளப்பாறைகள் அனைத்தும் தொண்டி முதல் வாலிநோக்கம் வரையில் உள்ள கடல் பகுதியில் 10 இடங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும், சென்னையிலிருந்து வரும் சிறப்புக் குழுவின் ஆய்வுக்குப் பிறகு, பாறைகள் அமைக்குமிடம் முடிவு செய்யப்படும் என மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் பிரபாவதி கூறினாா்.

செயற்கைப் பவளப்பாறைகள் அமைக்கப்படுவதுடன், தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை போன்றவற்றை விசைப்படகுகளில் அறவே பயன்படுத்தாமலிருக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தாலே அரிய வகை கடல் பசு போன்றவற்றை காக்க முடியும் என்று சமூக ஆா்வலா்கள் கூறினா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com