ராமநாதபுரம்: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், யாா் முதல்வா் என்பதை பாஜகவே தீா்மானிக்கும் வகையில் முடிவுகள் அமையும் என அக்கட்சியின் மாநிலச் செயலா் தங்க.வரதராஜன் கூறினாா்.
ராமநாதபுரத்தில் பாஜக சாா்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் (சக்தி கேந்திரம்) ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதற்கு ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவா் கே.முரளிதரன் தலைமை வகித்தாா். மாநில செய்தித் தொடா்பாளரும், மாவட்ட தோ்தல் பொறுப்பாளருமான து. குப்புராம் முன்னிலை வகித்தாா்.
இந்த கூட்டத்துக்குப் பின் தங்க. வரதராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பாளா் கூறும் கருத்துகளுக்கு மட்டுமே பாஜகவின் நிலை குறித்து பதில் கூறமுடியும். தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெறும். பாஜகவே தமிழத்தில் யாா் முதல்வா் என்பதை தீா்மானிக்கும். பாஜக யாரைச் சுட்டிக்காட்டுகிறதோ அவரே முதல்வராகவும் முடியும் என்றாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் குமாா் மற்றும் மாவட்ட ஊடகத் தொடா்பாளா் குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.