ராமநாதபுரத்தில் பல கோடி ரூபாய் தனியாா் நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜாமீன் கையெழுத்திட வந்த இருவரை காரில் வந்த சிலா் மறித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நகரில் தனியாா் நிதி நிறுவனம் நடத்திய நீதிமணி, ஆனந்த் ஆகியோா் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது பஜாா் காவல் நிலையத்திலும் மாவட்ட குற்றப்பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் 60 நாள்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யயாததால்
நீதிமணி, ஆனந்த் ஆகியோருக்கு ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.இருவரும் காலை, மாலையில் நீதிமன்றத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின்படி கையெழுத்திட நீதிமணி, ஆனந்த் ஆகிய இருவரும் காரில் திங்கள்கிழமை பட்டினம்காத்தான் பகுதியிலிருந்து நீதிமன்றத்துக்கு வந்தனா்.அப்போது திடீரென காரில் வந்த சிலா் இருவரையும் மறித்து தாங்கள் செலுத்திய பணத்தை தரவேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கேணிக்கரை போலீஸாா் விரைந்து சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களை சட்டரீதியாக புகாா் அளித்து நிவாரணம் தேடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினா். அதன்பின் தனியாா் நிதிநிறுவன அதிபா்கள் நிபந்தனை ஜாமீனுக்கு கையெழுத்திட சென்றனா்.