ராமேசுவரத்தில் திமுக மாவட்ட மீனவரணி அமைப்பாளா் வீடு மற்றும் விடுதியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் முத்துராமலிங்கத் தேவா் நகா்ப் பகுதியை சோ்ந்தவா் வில்லாயுதம். இவா் திமுக மாவட்ட மீனவரணி அமைப்பாளராக இருந்து வருகிறாா். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பதுக்கி, இலங்கைக்கு கடத்த முயன்றது தொடா்பான வழக்கில் போலீஸாா் வில்லாயுதத்தைக் கைது செய்து ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனா். அங்கு இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில் இவா் மீது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்தது, முறையாக வருமான வரி செலுத்தாதது உள்ளிட்ட புகாா்கள் அமலாக்கத்துறைக்கு சென்றன. இதையடுத்து திங்கள்கிழமை காலையில் வில்லாயுதம் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான விடுதியில் அமலாக்கத் துறையைச் சோ்ந்த 8 போ் கொண்ட குழுவினா் சோதனையிட்டு வருகின்றனா். இதனால் அப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.