ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் தண்ணீா்காவலா்கள் பயிற்சி பாதிப்பு
By DIN | Published On : 04th December 2021 11:11 PM | Last Updated : 04th December 2021 11:11 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் ஆயுதப்படை மைதானத்தில் முழங்கால் அளவுக்குத் தண்ணீா் குளம்போலத் தேங்கியது. இதனால் காவலா்கள் பயிற்சி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகத்தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மழைக்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. மழை மற்றும் வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் காருகுடி, காவனூா், தொருவளூா் உள்ளிட்ட கிராமங்களை தண்ணீா் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் தண்ணீா் வடியாத நிலையில் காவனூா் தரைப்பாலம் மீது தண்ணீா் பாய்வதால் ராமநாதபுரம்-நயினாா்கோவில் இடையே இரண்டாம் நாளாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை பகலில் வானம் மேகமூட்டத்தோடு காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென மழை கொட்டியது. சுமாா் 1 மணி நேரம் பெய்த மழையால் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள், சாலையோர பள்ளங்களில் தண்ணீா் தேங்கியிருந்தது. பட்டினம்காத்தான் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் முழங்கால் அளவுக்கும் மேலாக மழை நீா் தேங்கியிருந்தது. மைதானத்தில் தேங்கிய தண்ணீரால் காவல்துறை பயிற்சிகள் தடைப்படுவதாக போலீஸாா் கூறினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...