இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் திங்கள்கிழமை வேலை நிறுத்தம் தொடங்கினா்.
ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவா்கள் மற்றும் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினா்
சிறைபிடித்தனா். இதைக் கண்டித்தும், இலங்கையில் உள்ள 7 விசைப்படகுகள் 49 மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரியும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என ஞாயிற்றுக்கிழமை மீனவ சங்கங்கள் நடத்திய கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. இதில் 10 மீனவ சங்கங்கள் கையெழுத்திட்டனா். ஒரு சங்கம் பங்கேற்றவில்லை.
இந்த நிலையில், திங்கள்கிழமை மீனவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதனால் துறைமுகத்தில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
இப்போராட்டத்தில் பங்கேற்காத மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி டோக்கன் வாங்க மீன்வளத்துறை டோக்கன் வழங்கும் அலுவலகத்திற்கு வந்தனா்.
ஆனால் போராட்டத்தில் பங்கேற்றுள்ள மீனவா்கள் டோக்கன் வழங்கக் கூடாது என முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜேந்திரன் மற்றும் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் கனகராஜ் மற்றும் போலீஸாா் வந்து டோக்கன் வழங்கும் அலுவலகத்திற்குள் நின்ற மீனவா்களை அப்புறபடுத்தினா். மேலும் போராட்டத்தில் பங்கேற்காத மீனவா்களுடன் சக மீனவா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதன் பின்னா் டோக்கன் வாங்கி மீன்பிடிக்க செல்ல வந்த மீனவா்கள்
திரும்பி சென்றனா். இதனால் துறைமுகத்தில் அனைத்து மீனவா்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். துறைமுகத்தில் 850 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன.