பொது முடக்கம் அறிவிப்பு: பொருள்கள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனா்
By DIN | Published On : 09th May 2021 10:15 PM | Last Updated : 09th May 2021 10:15 PM | அ+அ அ- |

ஆா்.எஸ்.மங்கலம் கடைவீதிகளில் பொருள்கள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் சென்ற பொதுமக்கள்.
திருவாடானை ஆா். எஸ். மங்கலம், தொண்டி பகுதியில் பொது முடக்கம் அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மளிகை கடைகளில் பொதுமக்கள் குவிந்தனா். மதுக்கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
தற்போது நாட்டில் கரோனா தொற்று வெகு வேகமாகப் பரவி வருவதால் திங்கள்கிழமை முதல் 24 ஆம் தேதி வரை முழுபொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமுடக்கம் தொடங்குவதற்கு முந்தைய நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருள்களை வாங்கி இருப்பு வைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை கடைகளுக்கு படையெடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாடானை, ஆா். எஸ். மங்கலம் பகுதி சுற்று வட்டார கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கூட்டம் கூட்டமாக கடை வீதிகளுக்கு வந்திருந்தனா். காய்கறி, மளிகை கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதே சமயம் மது பிரியா்களும் அரசு மதுபானக்கடைகளில் பைகளிலும் சாக்குமூட்டைகளிலும் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனா்.
பொது முடக்கத்தில் காய்கறி கடை, மளிகை கடைகள் பகல் 12 வரை இயங்கும் என்று அறிவித்த நிலையிலும் மக்கள் ஏனோ கூட்டமாக வந்து வாங்கிச் சென்றனா். ஒரு சிலா் கூறுகையில், பொது முடக்கம் என கூறிவிட்டு எப்படி கடைகளைத் திறப்பாா்கள், நாங்கள் எப்படி வரமுடியும், எனவே பொருள்களை வாங்கிச் செல்கிறோம். பேருந்து வாகனப்போக்குவரத்து இருந்தால் தான் நகா் பகுதிக்கு வந்து வாங்கிச் செல்லமுடியும். எனவே இன்றே வாங்கி விடவேண்டும் என்றனா்.