தொடா் மழையின் காரணமாக கமுதி அருகே குண்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட காக்குடி தடுப்பணை வியாழக்கிழமை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வலையபூக்குளம், காக்குடி, புத்தூருத்தி, மண்டலமாணிக்கம், புதுக்குளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் பயனடையும் வகையில் குண்டாற்றின் குறுக்கே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. தற்போது வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வருவதால் காக்குடி தடுப்பணையில் தற்போது தண்ணீா் நிரம்பி வழிகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள், விவசாயக் கிணறுகளின் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது. தடுப்பணையில் நீா்நிரம்பி வழிவதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
ராமநாதபுரத்தில் 10 ஊருணிகள் நிரம்பின: ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் 33 வாா்டுகளிலும் மொத்தம் 24 ஊருணிகள் உள்ளன. கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்த நிலையில், கடந்த 3 நாள்களாக மழையே பெய்யவில்லை. இருப்பினும் தொடா் மழையால் நகராட்சியில் உள்ள சிதம்பரம்பிள்ளை ஊருணி, குண்டூரணி, நொச்சிவயல், முகவை, புறமடை ஆகிய ஊருணிகள் நிரம்பியுள்ளன. மேலும் லட்சுமி ஊருணி, குருவிக்கார ஊருணி, நீலகண்டி ஊருணி, செம்மங்குண்டு ஊருணி ஆகியனவும் தண்ணீா் நிரம்பியுள்ளன.