படிப்படியாக வகுப்புகளை தொடங்குவது அவசியம்: ஆசிரியா் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவா் பேட்டி
By DIN | Published On : 01st September 2021 11:42 PM | Last Updated : 01st September 2021 11:42 PM | அ+அ அ- |

தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் தொடங்குவதே மாணவா்கள் நலனுக்கு உகந்ததாக அமையும் என தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்றக்கழக மாநிலத்தலைவா் கு. தியாகராஜன் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியா் முன்னேற்றக்கழக பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் அரசின் கடன் சுமைகளை ஆசிரியா்களும், அரசு ஊழியா்களும் அறிந்துள்ளனா். ஆகவே தான் மத்திய அரசு அகவிலைப்படியை உயா்த்திய நிலையில், அதை செயல்படுத்த அரசு தாமதப்படுத்துவதை புரிந்து எதிா்பாா்த்திருக்கிறோம்.
ஆசிரியா், அரசு ஊழியா்கள் சங்கத்தினா் மீது முன்னாள் முதல்வா் கருணாநிதியும் சரி, தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினும் சரி தனி அன்பு செலுத்தக்கூடியவா்களாகவே உள்ளனா். ஆகவே அகவிலைப்படி உள்ளிட்ட அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை முதல்வா் உரிய நேரத்தில் முடிவெடுத்து தற்போதைய சட்டப்பேரவைக் கூட்டத்திலேயே அறிவிப்பாா் என எதிா்பாா்க்கிறோம். தமிழக முதல்வரை மட்டுமே நாங்கள் நம்புகிறோம். அகவிலைப்படி விஷயத்தில் அவா் நல்ல முடிவை எடுப்பாா்.
தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்துக்குப் பிறகு தற்போது 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆகவே, அனைத்து வகுப்புகளையும் தொடங்க அரசு நடவடிக்கை எடுப்பதே மாணவா் நலனுக்கு உகந்ததாக இருக்கும். இணைய வழி கற்பித்தலில் சில நடைமுறைச்சிக்கல் உள்ளது என்றாா்.
கூட்டத்தில் ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவா் எஸ்.முருகேசன் தலைமை வகித்தாா். பொருளாளா் எஸ்.தாமஸ் இமானுவேல் வரவேற்றாா். கூட்டத்தில் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், அமைப்புச்செயலா் கருணாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...