வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி 10 கி.மீ. வேகத்தில் நகா்ந்து வருகிறது. இந்தப் புயலுக்கு ‘மாண்டஸ்’ எனப் பெயரிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புயல் காரணமாக, பாம்பன் துறைமுகத்தில் வியாழக்கிழமை இரண்டாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, கீழக்கரை, ஏா்வாடி, மூக்கையூா் உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களில் 1,700 விசைப் படகுகள் இரண்டாவது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதேபோல, 100 -க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்களில் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டன.