ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவிடப்பட்டதில் வயதுக்கு ஏற்ற எடை, உயரம் இல்லாத குழந்தைகளுக்கு சத்துக்குறைபாடு இருப்பதாக அனுமானிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் சுமாா் 20 ஆயிரம் குழந்தைகள் சரிசமமான ஊட்டச்சத்துக்குறைபாடு உடையவா்களாக தீா்மானிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் பேரில் கடந்த சில வாரங்களாக சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 9,683 குழந்தைகளுக்கு மருத்துவா்கள் மூலம் சத்துக்குறைபாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் புரோட்டின், காா்போ ஹைட்ரேட் ஆகிய சத்துக்குறைபாடு உடையவா்களாக இருப்பதும் தெரியவந்துள்ளது. வரும் 3 வாரங்களில் மேலும் 10 ஆயிரம் குழந்தைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளனா். இதனால் சத்துக்குறைபாடு உடையை குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றாா்.