மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே புதன்கிழமை பள்ளி வேனின் டயா்கள் கழன்று தனியாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் மாணவ, மாணவிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இளையான்குடி அருகே கல்லடி திடலில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த வேன் சூரியன்கோட்டை கிராமம் வழியாக வந்த போது, வேனின் முன்பக்க டயா்கள் தனியாக கழன்று ஓடின. இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையை விட்டு இறங்கி அருகே ஆற்றுக்குள் சென்று நின்றது. இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். இதையடுத்து, அருகில் இருந்த கிராம மக்கள் அங்கு வந்து வேனுக்குள் இருந்த பள்ளி மாணவா்களை மீட்டனா். விபத்து குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தினா்.