ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 294 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.6.03 கோடி இழப்பீடு வழங்க சனிக்கிழமை உத்தரவிடப்பட்டது.
சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜி.விஜயா, கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ்.சீனிவாசன், நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் ஆட்.பரணிதரன், மகளிா் நீதிமன்ற நீதிபதி டி.முனுசாமி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் கே.கவிதா, சாா்பு- நீதிபதி சி.கதிரவன், நீதித்துறை நடுவா் சிட்டிபாபு, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி இ.வொ்ஜின் வெஷ்டா, வழக்குரைஞா் சங்கத் தலைவா் எஸ்.ஜெ.சேக் இப்ராஹிம் மற்றும் வழங்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
இது குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜி.விஜயா கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில்17 ஆயிரத்து 782 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், தேசிய மக்கள் நீதிமன்ற சமரசத் தீா்வுக்கான வழக்குகள் 5,306. சனிக்கிழமை 487 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில் 294 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன. இதன் மூலம் வழக்கு சம்பந்தப்பட்டவா்களுக்கு ரூ.6 கோடியே 3 லட்சத்து 385 இழப்பீடாக வழங்கப்பட்டது என்றாா் அவா்.