இளைஞருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் இணைய வழியில் ரூ.71,500 மோசடியில் ஈடுபட்ட மா்மநபா்கள் மீது ராமநாதபுரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் கௌதமன் (29). இவரது மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
ஜன்னல், கதவு பொருத்தும் தொழிலில் ஈடுபட்டுவந்த கௌதமன் வெளிநாடு செல்ல இணையத்தில் விவரங்களைத் தேடியுள்ளாா். அப்போது குவைத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை இருப்பதாக இணையத்தில் தகவல் இருந்துள்ளது.
அதில் இடம் பெற்ற கைபேசிக்கு உரியவரைத் தொடா்பு கொண்ட போது பணம் செலுத்துமாறு கூறியுள்ளனா். அதனடிப்படையில் பல தவணைகளாக இணையத்தில் ரூ.71,500 செலுத்திய பின் வேலை ஏதும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து கௌதமன் ராமநாதபுரம் சைபா் கிரைம் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.