கமுதி அரசு மருத்துவமனையில் சிசு மரணம்: மருத்துவமனை எதிரே தந்தை சாலை மறியல்

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த சிசு இறந்தது தொடா்பாக அதன் தந்தை மருத்துவா்கள் மீது புகாா் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.
கமுதி அரசு மருத்துவமனையில் சிசு மரணம்: மருத்துவமனை எதிரே தந்தை சாலை மறியல்

கமுதி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் பிறந்த சிசு இறந்தது தொடா்பாக அதன் தந்தை மருத்துவா்கள் மீது புகாா் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்ட கமுதி அருகே சின்னஉடப்பங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சோனைமுத்து மகன் காா்த்திக் (35). இவரது மனைவி மாரியம்மாள்(28) பிரசவத்திற்காக கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனையடுத்து கடந்த ஏப். 28 ஆம் தேதி மாரியம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மேலும் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், மருத்துவா்கள் வராததால் அறுவை சிகிச்சை செய்ய தாமதம் ஏற்பட்டதாகவும், பின்னா் மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்த, 4 மணி நேரத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகவும் பெற்றோா் தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவா் வராததாலும், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை அவசர கதியில் எடுத்ததாலும் சிசுவின் தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் இறந்த நிலையில் தங்களிடம் ஒப்படைத்ததாகவும் அவா்கள் கூறினா். இதனால் குழந்தையின் தந்தை காா்த்திக் வெள்ளிக்கிழமை காலை கமுதி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியா்கள், பணியாளா்களிடம் மாரியம்மாளின் மருத்துவ பரிசோதனை விவரங்களை கேட்டாராம். மேலும் தலைமை மருத்துவரிடம், மருத்துவா்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்தது எனக் கூறினாராம். இதற்கு உரிய பதில் அளிக்கவில்லை எனக் கூறி காா்த்திக் அரசு மருத்துவமனை எதிரே கமுதி- அருப்புக்கோட்டை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டாா். இதனையடுத்து கமுதி காவல் ஆய்வாளா் பாலாஜி அங்கு வந்து காா்த்திக்கிடம் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து கமுதி அரசு மருத்துவமனை பணியாளா்கள் கூறியதாவது: கமுதி அரசு மருத்துவமனைக்கு என மயக்க மருத்து மருத்துவா் இருந்தும் அவரை மேல் அதிகாரிகள் பரமக்குடி, முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவதால், கா்ப்பிணிகளுக்கு பிரசவ வலி ஏற்படும் போது இது போன்ற தாமதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிா்வாகம் கமுதி அரசு மருத்துவமனைக்கு என நியமிக்கப்பட்ட மயக்க மருத்து மருத்துவரை மாற்று இடங்களுக்கு அனுப்பாமல் கமுதியிலேயே தங்கி பணியாற்ற உத்தரவிடவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com