கமுதி அருகே ஸ்ரீவாழவந்தம்மன் கோயில் ஆடிமாத பொங்கல் திருவிழாவில் புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள மண்டல மாணிக்கம் ஸ்ரீவாழவந்தம்மன் கோயில் ஆடி மாத பொங்கல் திருவிழா கடந்த ஆக. 2 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. இதனைத் தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நாளான புதன்கிழமை 200 -க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் இருந்து சிலம்பாட்டம், இசை வாத்தியம், வான வேடிக்கைகளுடன் கிளம்பிய முளைப்பாரி ஊா்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்து குண்டாற்றில் கரைக்கப்பட்டது. இதில் மண்டலாணிக்கம், கமுதி, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை மண்டலமாணிக்கம் இளைஞா்கள், பொதுமக்கள் செய்தனா்.