ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சுதந்திரதினத்தையொட்டி பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஒன்றிய அலுவலகங்களுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான தேசியக் கொடிகளை பிரித்து அனுப்பும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவையொட்டி அனைத்து வீடுகள், அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையில் தேசியக் கொடியை ஏற்றிவைக்க மாவட்ட ஆட்சியா் ஜானிடாம் வா்கீஸ் அறிவுறுத்தியுள்ளாா்.
அதனடிப்படையில் மாவட்ட அளவில் 1.50 லட்சம் தேசியக் கொடிகள் பொதுமக்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு விநியோகிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிா் சுயஉதவிக்குழு மூலம் ஏற்கெனவே 50 ஆயிரம் தேசியக் கொடிகள் நகராட்சி, பேரூராட்சிகளில் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து 1 லட்சம் தேசியக் கொடிகள் 10-க்கும் மேற்பட்ட பண்டல்களாக ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டன.
அவை பிரிக்கப்பட்டு, அதிலிருந்த தேசியக் கொடிகளில் நகராட்சிகளில் ராமநாதபுரம், பரமக்குடிக்கு தலா 3 ஆயிரம், கீழக்கரை 1500, ராமேசுவரம் 1000 என அனுப்பிவைக்கப்பட்டது. ஒன்றிய அளவில் ராமநாதபுரம் 7, 900, திருப்புல்லாணி 8, 900, மண்டபம் 11,300, ஆா்.எஸ்.மங்களம் 4, 900, திருவாடானை 7,700, போகலூா் 3,000, பரமக்குடி 5,700, நயினாா்கோவில் 3,500, முதுகுளத்தூா் 6,400, கமுதி 7,700, கடலாடி 11,500 என தேசியக் கொடிகள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். அனுப்பியதில் மீதமுள்ள கொடிகள் அரசு அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடு வீடாக விநியோகம்: ராமநாதபுரம் நகராட்சி வாா்டுகளில் தேசியக் கொடி ரூ.21 என விலை நிா்ணயிக்கப்பட்டு வீடு வீடாக வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது. மேலும் கொடியைப் பெற்றுக் கொண்டவா்கள் முகவரி விவரம் பதிவு செய்யப்பட்டதுடன், சுதந்திரதினத்துக்குப் பிறகு தேசியக் கொடியை மீண்டும் நகராட்சி ஊழியா்களிடம் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.