காணாமல் போன 115 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு
By DIN | Published On : 25th August 2022 02:58 AM | Last Updated : 25th August 2022 02:58 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போன 115 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் நுண்குற்றப்பிரிவு போலீஸாா், பல்வேறு இடங்களில் காணாமல் மற்றும் வழிப்பறி மூலம் தொலைந்த கைப்பேசிகளை கண்டறிந்தனா். அதை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மீட்கப்பட்ட 115 கைப்பேசிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, உரியவா்களிடம் அளித்தாா்.
பின்னா் அவா் கூறியது: தனி நபரிடம் இருந்து கைபேசியை வாங்கும் கடைக்காரா்கள் அது திருட்டு கைப்பேசியா என விசாரித்தே வாங்கவேண்டும். மக்கள் கைப்பேசி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் போது விழிப்புணா்வுடன் இருப்பது அவசியம் என்றாா்.
அப்போது நுண்குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், ஆய்வாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.