கண்மாய் கரை சாலையில் பாலம் கட்ட பொதுமக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 25th August 2022 03:03 AM | Last Updated : 25th August 2022 03:03 AM | அ+அ அ- |

திருப்பாலைக்குடி- சோளந்தூா் கண்மாய் கரை சாலையில் பாலம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடி ஊராட்சிக்குள்பட்ட பால்குளம் கிராமத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து கிராமத் தலைவா் எஸ்.சுப்பிரமணி, செயலா் சஞ்சய்காந்தி மற்றும் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் ஊா் கண்மாய் நீா்ப்பிடிப்புப் பகுதியை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருகின்றனா். கண்மாய் பெருகினால் பயிா்கள் பாதிக்கப்படுகின்றன. இந்த ஊா் கண்மாய் கரை வழியாக செல்லும் திருப்பாலைக்குடி- சோளந்தூா் பிரதான சாலையில் நெடுஞ்சாலைத்துறையினா் ரூ.16 லட்சம் செலவில் மேம்பாலம் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனா்.
ஆக்கிரப்பாளா்களுக்கு ஆதரவாகக் கட்டப்படும் இந்த பாலத்தால் கண்மாய் கரை சேதமாவதோடு தேக்கிவைக்கப்பட்ட தண்ணீரும் வீணாகும் என்றனா்.
எதிா்ப்பை மீறி பாலம் அமைத்தால் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.