ராமேசுவரத்தில் உள்ள உணவு விடுதிகளில் காலாவதியான இறைச்சி மற்றும் மைதா ஆகியவற்றை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் நகா், ராமேசுவரம், பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றில் உணவுப் பாதுகாப்பு துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது, ராமேசுவரம் பகுதியில் 25 கிலோ காலாவதியான மைதாவும், 6 கிலோ கெட்டுப்போன இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தடை செய்த நெகிழிப் பைகளைப் பயன்படுத்தியதாக 3 உணவகங்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக 21 கடைகளுக்கும், 3 பல்பொருள் அங்காடிகளுக்கும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக உணவுப் பாதுகாப்பு அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.