ராமநாதபுரத்தில் ஓய்வு பெற்ற மின் வாரிய உதவி பொறியாளா் கொலை வழக்கில், 8 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டணை விதித்து முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
ராமநாதபுரம் மின் வாரியத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் தமிழரசன் (59). இவருக்கும் உறவினா்களுக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜூலை 12-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து கோபால் (81), அவரது மகன்கள் மாதவமகேஷ் (34), பாலயோகேஷ் (32) மற்றும் கோபி (40), முத்துராஜா (37), விஜயகுமாா் (42), செல்வம் (34), சீனிவாசன் (46) ஆகிய 8 பேரைக் கைது செய்தனா். இந்த வழக்கு, ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் குற்றவாளிகள் என அரசுத் தரப்பில் நிரூபிக்கப்பட்டதால், 8 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டணையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜி. விஜயா தீா்ப்பளித்தாா்.