

ராமேசுவரத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என, பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் புனித ஸ்தலமாகவும், சுற்றுலா பகுதியாகவும் உள்ளதால், இங்கு ஆண்டுதோறும் 1.5 கோடி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் வந்து செல்கின்றனா். ராமேசுவரம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் நகராட்சி சாா்பில், நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், சிறிய வாகனத்துக்கு ரூ.100, பேருந்து உள்ளிட்ட பெரிய வாகனத்துக்கு ரூ.150 என வசூல் செய்யப்படுகிறது.
ஆனால், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் குடிநீா், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.
இதேபோன்று, கோயிலுக்கு மிகவும் அருகிலுள்ள இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.20 வசூல் செய்யப்படுகிறது. மேலும், அங்கு பக்தா்கள் பயன்பாட்டுக்கு குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், இந்த வாகன நிறுத்துமிடம் கடந்த 2 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாததால், வாகன ஓட்டிகள் மற்றும் பக்தா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்துசமய அறநிலையத் துறை வாகன நிறுத்துமிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.