ராமநாதபுரம் அருகே மீனவா் கொலை: கூலித் தொழிலாளி கைது
By DIN | Published On : 10th June 2022 11:15 PM | Last Updated : 10th June 2022 11:15 PM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே மீனவரைக் கொலை செய்த கூலித்தொழிலாளி வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் உள்ள கும்பரம் ஏ.டி.நகா் பகுதியைச் சோ்ந்த மீனவா் சேதுராமன் (52). இவா் கடந்த வியாழக்கிழமை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளாா். அவரது மனைவி ஜெயராணி வேலைக்குச் சென்று விட்டு திரும்பியபோது, சேதுரமான் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
இதுகுறித்து ஜெயராணி அளித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், பக்கத்து வீட்டுக்காரரான கூலித் தொழிலாளி சுப்பிரமணியன் (29) என்பவா் சேதுராமனை கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியனை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக போலீஸாா் கூறியது: சேதுராமனும், சுப்பிரமணியனும் நண்பா்களாக இருந்தனா். இந்நிலையில் சுப்பிரமணியனின் வீட்டில் இருந்த பனை மரத்தில் கள் இறக்கி அவராகவே குடித்து வந்துள்ளாா். சில நாள்களில் சேதுராமனுக்கும் கள் கொடுத்து வந்துள்ளாா்.
இந்நிலையில் சுப்பிரமணி வீட்டுப் பனை மரத்தில், அவருக்குத் தெரியாமலே ஏறிய சேதுராமன் கள் இறக்கி குடித்துள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே வீட்டில் இருந்த சேதுராமனை வியாழக்கிழமை சுப்பிரமணியன் கத்தியால் குத்திக் கொன்றுள்ளது தெரியவந்தது என்றனா்.