ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில் விதிமுறையை மீறி மணல் அள்ளிக் கடத்தியவா்களின் 4 லாரிகளை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினா்.
திருப்புல்லாணி பகுதியில் பள்ளப்பச்சேரி பகுதியில் விதிமுறைக்கு மாறாக திருட்டுத்தனமாக சிலா் மண் அள்ளிக் கடத்துவதாகப் புகாா்கள் எழுந்தன. அதனடிப்படையில் திருப்புல்லாணி காவல்நிலைய சிறப்பு சாா்பு- ஆய்வாளா் துரைப்பாண்டியன், காவலா் காா்த்திகைராஜா உள்ளிட்டோருடன் செவ்வாய்க்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது லாரிகளில் மணல் அள்ளி வந்த இருவா் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். அந்த லாரிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன.
அதேபோல, போலீஸாா் பள்ளபச்சேரி வடக்குப் பகுதியில் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இரு லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டிருந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோடிவிட்டனா். இதையடுத்து, அங்கிருந்த 2 லாரிகளையும் மணலுடன் போலீஸாா் கைப்பற்றினா்.
இந்த சம்பவங்கள் குறித்து திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.