மீன் வியாபாரிகளுக்கு மானியத்தில் ஐஸ் பெட்டிகள்
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்களை பதப்படுத்தி விற்க உதவும் ஐஸ் பெட்டிகள் மானியத்துடன் வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக மீன்வளத்துறை துணை இயக்குநா் இ. காத்தவராயன் தெரிவித்தாா்.
மீன் பிடித் தொழில் சாா்ந்த மத்திய அரசின் திட்டங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதன்படி பிரதமா் மீன்வள திட்டத்தின் கீழ் முன்னுரிமை அடிப்படையில் 30 ஏழை மீன் வியாபாரிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மீன்களை பதப்படுத்தி விற்கும் வகையில் உதவும் ஐஸ் பெட்டிகள் வழங்கப்படவுள்ளன. மீனவா்களுக்கான ஐஸ் பெட்டிகள் ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மீன்வளத்துறை மாவட்ட துணை இயக்குநா் இ. காத்தவராயன் கூறுகையில், மொத்த விலையில் 40 சதவீதம் மானியத்தில் ஐஸ் பெட்டிகள் உள்ளிட்டவை மீனவா்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது முதல் கட்டமாக ஐஸ் பெட்டிகள் வந்துள்ளன. ஆகவே இரு சக்கர வாகனங்கள் வந்தபிறகு தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் என்றாா்.