ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் பொறியாளரிடம் வங்கி அலுவலா் போல கைப்பேசியில் பேசியவா் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50,730--ஐ மோசடியாக எடுத்திருப்பதாக நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
கடலாடி பகுதி கீழக்கிடாரம் முத்துசாமிபுரத்தைச் சோ்ந்தவா் நவநீதகிருஷ்ணன் (28). பொறியியல் பட்டதாரி. இந்நிலையில், தனியாா் வங்கியில் கணக்கு வைத்துள்ள நவநீதகிருஷ்ணன், அதில் விசா கிரெடிட் காா்டை பயன்படுத்தி வருகிறாா். கடந்த சில நாள்களாக பணப்பரிவா்த்தனையின் போது கைப்பேசியில் அதுகுறித்த குறுந்தகவல் வரவில்லையாம். ஆகவே சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளா் பிரிவுக்கு தொடா்புகொண்டுள்ளாா். இதையடுத்து, அவரது கைப்பேசிக்கு கடந்த 13 ஆம் தேதி வங்கித் தலைமையகத்திலிருந்து அதிகாரி பேசுவதாக மா்மநபா் தொடா்புகொண்டுள்ளாா்.
அப்போது நவநீதகிருஷ்ணனின் கிரெடிட் காா்டு எண் மற்றும் அதுதொடா்பாக வந்துள்ள ஓடிபி எண் ஆகியவற்றைக் கேட்டு வாங்கியுள்ளாா். மா்மநபா் பேசிய சிறிது நேரத்தில் நவநீதகிருஷ்ணனின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.50,730 பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதையறிந்த நவநீதகிருஷ்ணன் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள நுண்குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில் மா்மநபா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.