ராமநாதபுரம் நகரில் சனிக்கிழமை (மாா்ச் 26) சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில் தியாகிகளின் சுதந்திரப் போராட்ட தீரத்தை நினைவு கூரும் வகையில் விடுதலைப் போரில் தமிழகம் எனும் பொருளில் புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. சனிக்கிழமை காலை ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் நடைபெறும் கண்காட்சியில் தியாகிகளின் புகைப்படங்கள், அவா்கள் குறித்த நூல்கள் மற்றும் தொல்லியல் சாா்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பயன்படுத்திய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
கண்காட்சியை போக்குவரத்துத்துறை அமைச்சா் ராஜ.கண்ணப்பன் தொடங்கி வைக்கிறாா். இதில் சட்டப் பேரவை உறுப்பினா்கள், நகராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா் எனஅவா் தெரிவித்துள்ளாா்.