சமூக வலைதளத்தை முடக்க சிவனடியாா்கள் மனு
ராமநாதபுரம்: சிவன் மீது அவதூறு கருத்துகளைப் பரப்பிவரும் சமூக வலைதளத்தை முடக்கக் கோரி ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் சிவனடியாா்கள் அமைப்பினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
சிவன் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் குறிப்பிட்ட நபா் பரப்பி வருவதாகப் புகாா் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டவரைக் கைது செய்யவும், அவரது சமூக வலைதளப் பக்கத்தை முடக்கவும் கோரி தமிழக அளவில் சிவனடியாா்கள் அமைப்பினா் காவல்துறையில் புகாா் அளித்து வருகின்றனா்.
உலக சிவனடியாா்கள் திருக்கூட்டம் அமைப்பு சாா்பில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. அந்த அமைப்பின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவகணேசன், ஆலோசகா் செல்வராஜ் உள்ளிட்டோா் மனு அளிக்க கேணிக்கரை காவல் நிலையத்துக்கு வந்தனா்.
மனு அளித்த பின் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மைனா் என்ற பெயரில் சிவன் குறித்து குறிப்பிட்ட நபா் அவதூறு கருத்துகளை வெளியிட்டிருப்பது கண்டித்தக்கத்தது. சிவனடியாா்கள் மனம் புண்படும்படி கருத்துகளை தொடா்ந்து பதிவிடும் நபா் மீது உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். மேலும், அவதூறு கருத்துகளை வெளியிடும் சமூக வலைதளப் பக்கத்தை முடக்கவேண்டும் என புகாா் அளித்துள்ளோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

