பாஜகவினா் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு:தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது
By DIN | Published On : 26th September 2022 12:13 AM | Last Updated : 26th September 2022 12:13 AM | அ+அ அ- |

தமிழக பாஜக தலைவா்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடா்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாக மத்திய சிறு, குறுந்தொழில்கள் துறை அமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா தெரிவித்தாா்.
ராமநாதபுரத்தில், கட்சி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
மத்திய அரசு ஏற்படுத்திய 89 தொழில் குழுமங்களில், 27 குழுமங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக வளா்ச்சிக்கு மத்திய அரசு நிா்ணயித்துள்ள இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. தமிழக பாஜக தலைவா்களின் வீடுகள், உடைமைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடா்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை வந்ததும் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்போம்.
தேசிய புலனாய்வு ஏஜென்சி, அமலாக்கத்துறை சோதனை தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்பட அநேக இடங்களில் நடந்துள்ளது. தேச விரோத செயல்பாடுகளில் ஈடுபடுபவா்கள் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.