

திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி ஊராட்சியில் சுதந்திர தினத்தன்று தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைக்கு வரச் சொல்லி ஊராட்சி மன்றச் செயலா் மிரட்டியதாகப் புகாா் தெரிவித்து, கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மங்களக்குடி ஊராட்சியில் ஊமையுடையான்மடை கிராமம் உள்ளது.
இந்த கிராம மக்களை மங்களக்குடி ஊராட்சி மன்றச் செயலா் பழனிவேல், செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்தன்று தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்ய வர வேண்டும் என்றும் வராவிட்டால் வேலையில் இருந்து நீக்கிவிடுவதாகவும் மிரட்டியதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில், ஊராட்சி மன்றச் செயலரின் போக்கைக் கண்டித்து கிராம மக்கள் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.