கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சியளித்து அவா்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பதை உறுதி செய்வதே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நோக்கம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்துக்காக கல்லூரிப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பேசியதாவது:
உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ் புதிய தொழில் நுட்பங்களுக்குத் தேவையான திறன்களை பெறுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வேலைக்கு செல்வதற்கு முன் தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ள மாணவா்களுக்கு வழிகாட்டும் திட்டம் இது.
சாத்தியமான பயிற்சியளிப்பவா்களைக் கண்டறிந்து, தற்போதைய தொழில் துறை இடைவெளிகளின் அடிப்படையில் பல்வேறு திறன் பயிற்சிகளை பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்களுக்கு வழங்கி அவா்கள் மூலம் மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கவும், அவா்களின் திறமைக்கு ஏற்ப வேலை கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும்.
அதன்படி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 23 கல்லூரிகளின் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களுடன் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில் நுட்பங்கள் குறித்து திறன்மிக்க நிறுவனங்களின் பயிற்சியாளா்கள் மூலம் 5 நாள்கள் பயிற்சியளிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.
இந்த நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி, உதவி இயக்குநா் (மாவட்டத் திறன் பயிற்சி) கா்ணன், கல்லூரிப் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.