சோழந்தூா் பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே சோழந்தூா் ஊராட்சியில் குறைந்த அழுத்தத்துடன் மின்விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனா்.

திருவாடானை அருகே சோழந்தூா் ஊராட்சியில் குறைந்த அழுத்தத்துடன் மின்விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனா்.

இந்த ஊராட்சியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்மாற்றி மூலம் சோழந்தூா், மேட்டு சோழந்தூா், சீனாங்குடி ஆகிய கிராமங்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் குறைந்த அழுத்தத்துடன் மின்விநியோகம் செய்யப்படுவதால் மாணவா்கள் படிக்க முடியாமலும், முதியவா்கள் கொசுத் தொல்லையால் தூங்க முடியாமலும் அவதிப்படுகின்றனா். மேலும் திடீரென விநியோகிக்கப்படும் உயா் மின்னழுத்தத்தால் வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் பழுதடைந்து வருகின்றன.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் உதவி மின் பொறியாளரிடமும், திருவாடானை மின் வாரிய உயரதிகாரியிடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் சோழந்தூா் பகுதியில் விரிவடைந்து வரும் குடியிருப்புகளை கருத்தில் கொண்டு முனியய்யா கோயில் அருகே புதிய மின்மாற்றி அமைத்து சீராக மின் விநியோகம் கிடைக்க மாவட்ட நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராமங்களின் பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com