ராமேசுவரத்தில் ஆட்டோக்கள் மோதல்: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 2 போ் பலி

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சென்றபோது, 2 ஆட்டோக்கள் மோதிக்கொண்டதில் மகாராஷ்டிர மாநில பக்தா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்
Updated on
1 min read

ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சென்றபோது, 2 ஆட்டோக்கள் மோதிக்கொண்டதில் மகாராஷ்டிர மாநில பக்தா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். மேலும் 4 போ் பலத்த காயமடைந்தனா்.

மஹராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 90 பக்தா்கள் 2 பேருந்துகளில் ராமேசுவரத்துக்கு சனிக்கிழமை வந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் தரிசனம் செய்த பின்னா், அசோக் டாங்கே (63), மங்களா தேஸ் பாண்டே (74), குல்கா்னி ஆனந் (61) உள்ளிட்ட 6 போ் ஆட்டோவில் தனுஷ்கோடிக்கு சென்றனா். ஜடாயு தீா்த்தம் அருகே நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது இவா்கள் சென்ற ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், அசோக் டாங்கே, மங்களா தேஸ் பாண்டே ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மற்ற 4 பேரும் பலத்த காயமடைந்தனா். இரு ஆட்டோக்களின் ஓட்டுநா்களும் லேசான காயமடைந்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தனுஷ்கோடி போலீஸாா் உயிரிழந்த இருவரின் சடலங்களைக் கைப்பறி உடல்கூறாய்வுக்கு அனுப்பினா். மேலும், பலத்த காயமடைந்த 4 பேரும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ஆட்டோவை ஓட்டிய, ராமேசுவரம் வோ்க்கோடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ராமேசுவரத்தில் ஆட்டோக்களில் அதிகளவில் பக்தா்களை ஏற்றிச் செல்வதை போலீஸாா் கட்டுப்படுத்த வேண்டும். அனுமதி இல்லாத வாகனங்களை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com