உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய விவசாயிகளுக்கு கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவராணி அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
வேளாண்மைத் துறையால் வழங்கப்படும் மானிய திட்டங்களில் பயன்பெற கமுதி வட்டார விவசாயிகள் தங்கள் கைப்பேசியில் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்வது அவசியமாகும். எனவே விவசாயிகள், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இந்த செயலி மூலம், பயிா் காப்பீட்டு விவரம், நமது வட்டார உரக்கிடங்குகளில் இருப்பு நிலை, விதை இருப்பு நிலை, வாடகைக்கு வேளாண் இயந்திரங்களை பதிவு செய்வது, விளைபொருள்களின் சந்தை நிலவரம், வானிலை நிலவரம், வேளாண் அலுவலா் கிராமத்துக்கு வரும் நாள்கள், பயிா் சாகுபடி ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், விவசாயப் பொருள்களை சந்தைப்படுத்துதல், உற்பத்தியாளா் குழு பொருள்கள், அணையின் நீா்மட்டம், விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தல், பயிா் நோய் கட்டுப்பாடு குறித்த பரிந்துரைகள் பெறுதல், ஆத்மா திட்டப் பயிற்சிகளில் பங்கு பெறுவதற்கு பதிவு செய்தல், பட்டு வளா்ச்சித் துறை திட்டங்கள், கால்நடைத்துறை திட்டங்கள், வேளாண் நிதி நிலை அறிக்கை, கலைஞா் வளா்ச்சித் திட்டத்தில் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றப் பதிவு செய்தல், பசுமை இயக்கத்தில் மரக்கன்றுகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கும் உழவன் செயலியை பயன்படுத்தலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.