10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் சட்ட நடவடிக்கை
By DIN | Published On : 07th November 2023 12:00 AM | Last Updated : 07th November 2023 12:00 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் : யாரேனும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால், தொடா்புடையோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பா. விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு கருத்து உள்ளது. இது, தவறான கருத்து என மத்திய ரிசா்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் விளக்கம் பெறுவதற்காக 14440 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையும் செயல்பாட்டில் உள்ளது. இருப்பினும், 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடா்ந்து பரவிக் கொண்டே உள்ளது.
நாட்டின் பொருளாதாரம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வடிவமைப்புகளில் நாணயங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இதுவரை 14 வகையான வடிமைப்புகளில்
10 ரூபாய் நாணயங்களை மத்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டது. இந்த 14 வகையான நாணயங்களும் செல்லத்தக்கவையே ஆகும்.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரூபாய் நாணயத்தை செல்லாது எனக் கூறுவதும், பணப் பரிமாற்றத்தின் போது அந்த நாயணத்தை வாங்க மறுப்பதும் சட்டப்படி குற்றமாகும். அரசு அங்கீகரித்த நாணயத்தை வாங்க மறுப்பவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ-படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
எனவே, 10 ரூபாய் நாணயங்களை தயக்கமின்றி பணப்பரிமாற்றத்தில் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். இந்த அறிவுறுத்தலை மீறுவோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...